3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏனைய இருவரின் நிலை தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 17 முதல் 18 வயது வரை மதிக்கத்தக்க அங்குள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் .
வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில் இவ்வாறு கடல் இழுத்துச் சென்றுள்ளது.இதில் ஒருவர் மீட்கப்பட்டதுடன் ஏனைய இருவரை தேடும் பணியில் கடற்படையினர் கடற்தொழிலாளர்கள் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் மூவரில் ஒருவர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு நண்பர்களும் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
தற்போது மீட்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது. சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.