வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காவத்தமுனை, பனிச்சையடி வீதியிலும் நாவலடியிலுமாக கொழும்பைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியுடன் 4 இளைஞர்கள் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே கொழும்பைச் சேர்ந்த போதை வியாபாரியுடன் 24, 25, 28, 28 வயதுடைய நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 2 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கொழும்பு நபர் கொழும்பிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களைக் கொண்டு வந்து இப்பிரதேசத்தில் இளைஞர்கள் ஊடாக விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த நபரையும் இளைஞர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றி ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் வாழைச்சேனை பொலிஸார் இவர்களுடன் தொடர்புடைய நபர்களைத் தேடி வருகின்றனர்.