வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று(27) இரவு தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் ஒருவர் காணப்பட்டுள்ளார். அதனை அவதானித்த பிரதேச மக்கள் அவரை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்பதாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் வர்த்தக நிலையம் ஒன்றின் மேற்பகுதியில் அமைந்துள்ள விடுதியில் மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.