வவுனியா தெற்கு நொச்சிக்குளம் கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிராமத்தினை சேர்ந்த 3 பேர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றபோது, அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
குறித்த நபர்கள் வைத்தியசாலையில் தங்காமல் தப்பிச்சென்றிருந்த நிலையில் இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதார பிரிவினர் கிராமத்தில் தேடுதல் நடாத்தி ஏழு நபர்களை தனிமைப்படுத்தியிருந்தனர்.
எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அதனை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர், இது தொடர்பாக சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து குறித்த பகுதியை சேர்ந்த 150 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் 32 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் வசிக்கும் அனேக மக்கள் நாடோடிகளாக தொழில் செய்பவர்கள் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.