இருவரை கடத்திச்சென்று, அவ்விருவரின் உள்ளங்கைகளில் ஆணிகளை அறைந்தாக கூறப்படும் பூசாரி உள்ளிட்ட குழுவினரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட இருவரையும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வானும் கைப்பற்றப்பட்டுள்ளது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் இன்னும் 10 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் விசேட அதிரடிப்படையினர், அவர்களை தேடி வலைவிரித்துள்ளதாக தெரிவித்தனர்.
கண்டி- பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களே, அவ்விருவரையும் அம்பிட்டி பகுதிக்குக் கடத்திச் சென்று, கடந்த 25ஆம் திகதியன்று இவ்வாறு துன்புறுத்தியுள்ளனர்.
பேஸ்புக்கில் சேறு பூசியதாகக் கூறப்படும் இவ்விரு இளைஞர்களையும், தன்னுடைய வீட்டுக்கு அந்த பூசாரி அழைத்துள்ளார். அதன்பின்னர், அம்பிட்டிய பிரதேசத்துக்கு அழைத்துச் சென்று. அங்கிருந்த சிலருடன் சேர்ந்தே அவ்விருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, இவ்வாறு மிகக் கொடூரமான முறையில், ஆணிகளை ஏற்றி, துன்புறுத்தியுள்ளனர்.