பெரியநீலாவணை – மருதமுனையில் காணாமல்போன தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அம்பாறை – பெரியநீலாவணை, மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 54 வயதுடைய எம்.ஆர். பஸீரா என்ற பெண் கடந்த இரண்டு தினங்களாகக் காணாமல் போயிருந்தார்.
மருதமுனையில் காணாமல்போன இரண்டு பிள்ளைகளின் தாய் 65 மீட்டர் வீடமைப்பு பகுதிக்குப் பின்புறமாகவுள்ள குளத்திலிருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த தாய் காணாமல்போனமை தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், உதவி செய்யுமாறு பொது மக்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பிரதேச மக்களும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மருதமுனை 65 மீட்டர் வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்துக்குள் உயிரிழந்த நிலையில் தாயின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.