காலி முகத்திடல் போராட்ட இடத்திற்கு பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளமை குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
காலி முகத்திடலில் பொலிஸாருக்கு சொந்தமான ட்ரக் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டமை குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கருத்து தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் ஓய்வூ எடுக்கும் வகையில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன், உணவு உட்கொள்வதற்கும், ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கும் பொலிஸாருக்கு இந்த ட்ரக் வண்டிகளின் ஊடாக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறித்த ட்ரக் வண்டிகளில் சாரதிகளை தவிர வேறு எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கிடையாது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை போல, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் தாம் அந்த வாகனங்களை நிறுத்தி வைக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.