அத்தியாவசிய தேவைகள் தவிர, நாளை (18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வழக்கமான விநியோகம் வியாழக்கிழமை (19) ஆரம்பிக்கும் என்றும் நாளை எரிபொருள் நிலையங்களில் டீசல் கிடைக்கும் என்றும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்திய கடனுதவியின் கீழ் நாட்டுக்கு டீசல் கொண்டு வரப்பட்டயைடுத்து நாடு முழுவதும் டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கம், இன்று (17) தெரிவித்தது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் இடம்பற்று வருவதாகவும்
நாடு முழுவதும் 70-75 சதவீதம் டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுவாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 300-400 பௌசர்கள் அனுப்பப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இன்று சுமார் 250-300 பௌசர்கள் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்ததுடன், எரிபொருள் கையிருப்புகள் கிடைத்தவுடன் அனைத்து பௌசர்களும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான பெற்றோல் விநியோகத்தில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும் நேற்று 10 சதவீதத்துக்கும் குறைவான விநியோகம் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் 92 ஒக்டேன் பெற்றோல் விநியோகத்தில் மிகவும் கட்டுப்பாடான நிலை காணப்படுவதாக இன்று (17) ஒப்புக்கொண்ட எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இந்த நிலைமை மீட்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
பெற்றோல் தேவைக்கேற்ப அமைச்சினால் தொடர்ந்தும் வழங்க முடியும் என்றும் ஆனால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக 92 ஒக்டேன் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், நாளை (18) பெற்றோல் தொகுதியை இறக்குமதி செய்யவுள்ள கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதால், மூன்று நாட்களுக்குப் பின்னர் பெற்றொல் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்றார்.
தங்களிடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்பகத்தில் போதுமான டீசல் கையிரப்பு உள்ளதாகவும் இது முழு நாட்டுக்கும் போதுமானது என்றும் வரிசை ஒழிப்பதற்கான நடைமுறையை தொடர எதிர்பார்க்கிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.