அம்பாறை மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் இருந்து மட்டு காத்தான்குடி பிரதேசத்துக்கு மோட்டர்சைக்கிள் ஒன்றில் கேரள கஞ்சா கடத்தி சென்ற இருவரை மருதமுனையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று சனிக்கிழமை (09) கைது செய்ததுடன் 2 கிலோ கேரள கஞ்சா மற்றும் 13,500 ரூபா பணத்தை மீட்டு ஒப்படைத்துள்ளதாக பெரிய நீராவணை பொலிசார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சம்பவதினமான சனிக்கிழமை மாலை விசேட அதிரடிப்படையினர் பொலிஸாருடன் இணைந்து மருதமுனை கடற்கரைப்பகுதியை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன் போது மோட்டார் சைக்கிளிள் கஞ்சாவுடன் பயணம் செய்த இருவரை விசேட அதிரடிப்படையினர் மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 2 கிலோ கேரள கஞ்சா மற்றும் 13,500 ரூபா பணத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை இஸ்மாயீல் புரத்தை சேர்ந்த 40 வயதுடையவரும், மருதமுனை பீச் வீதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் இவர்களை கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பணம் மோட்டர் சைக்கிளுடன் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.